Saturday, 27 April 2013

பக்குவம் எய்தும் பரமானந்தம்



பக்குவம் எய்தும் பரமானந்தம்

எய்திய நாளில் இளமை கழியாமை
எய்திய நாளில் இசையினால் ஏத்துமின்
எய்திய நாளில் எறிவது அறியாமல்
எய்திய நாளில் இருந்துகண் டேனே.


விளக்கம்:
 பிறவிப் பேறு எய்தி, மனிதனாகப் பிறந்த பிறவியின் பெருமையை எண்ணி, அந்தப் பிறவியில் இளமைப் பருவம் இருக்கும் போதே இசை பாடி ஈசனைத் தொழுது பணியுங்கள். மானுடப் பிறப்பும், இளமையும் இருக்கும்போதே இறை உணர்வுக்குத் தடையாக இருந்த மன மயக்கங்களைத் தூக்கி எறிய அறியாது இருந்தவன், இதைத் தூக்கி எறியும் பக்குவ நிலை எய்தியபோது, என்னுள் இருந்த பரனோடு கலந்து பேரின்பம் கண்டேன்.

Wednesday, 27 February 2013

சிந்தை அடங்கில்

சிந்தை அடங்கில்...



கத்தவும் வேண்டாம் கருத்துஅறிந்து ஆறினால்
சத்தமும் வேண்டாம் சமாதி கைகூடினால்
சுத்தமும் வேண்டாம் துடக்கற்று நிற்றலால்
சித்தமும் வேண்டாம் செயல்அற்று இருக்கிலே.


விளக்கம்:
 அறநூல்கள் கூறும் மெய்ப்பொருளின் உண்மை உணர்ந்து அறிவும் மனமும் அடங்கப் பெற்றால் வீண் ஆராவாரம் தேவையில்லை. அதே போல, மனம் அடங்கி நிட்டையில் இருக்கின்ற யோகம் கைவரப் பெற்று விட்டால், உரக்க ஒலியெழுப்பி உபதேசம் செய்யவோ ஆடம்பரமாகப் பேசி ஆர்ப்பாட்டம் செய்யவோ வேண்டாம். ஆசையும் பாசமும் அகன்று, பற்றற்று நின்றால், புறத் தூய்மை வேண்டும் என்ற அவசியம் இல்லை (அகத் தூய்மை பெற்று விட்டதால்). மனம் செயல் அற்றுச் சிந்தனை ஒருமுகப்பட்டு விட்டால், மனமும் வேண்டாம். மனமும் வேண்டாம் என்பது மனம் என்று ஒன்று இருப்பதையே மறந்துவிடும் தவயோகம் கைகூடிவிட்ட பின் சித்தம் செயலற்று விடும்.

Saturday, 23 February 2013

தனித்திரு துதித்திரு

தனித்திரு துதித்திரு 


தானே புலன்ஐந்தும்  தன்வச மாயிடும்
தானே புலன்ஐந்தும்  தன்னில் போயிடும்
தானே புலன்ஐந்தும் தன்னில் மடைமாறும்
தானே தனித்துஎம் பிரான்தனைச் சந்தித்ததே.

விளக்கம்:

 தாமாகவே மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்புலன்களும் நமக்கு அடங்கும். நம் சொற்படி இயங்கும். இந்த ஐம்புலன்களும், தாம் விரும்பியபடி, நம்மை இயக்கும் தன்மையை இழக்கும். ஐம்புலன்களும் இதுவரை அவை விரும்பும் வண்ணம் நம்மை ஆட்டுவித்த நிலைமை மாறும். இவை எல்லாம் யாருக்குக் கைகூடும் என்றால், ஐம்புலன் இச்சையில் இருந்து விடுபட்டுத் தனியே சென்று (ஆசாபாசம் அகற்றிப் ) பரம்பொருளை அடைந்து அவன் திருவடி பற்றியவர்களுக்கு, இவையெல்லாம் சித்திக்கும்.