Wednesday, 23 May 2012

சித்தம்பர நடனம்

சித்தம்பர நடனம்

சித்தம் திரிந்து சிவமயம் ஆகியே
முத்தம் தெரிந்துற்ற மோனர் சிவமுத்தர்
சுத்தம் பெறலாம் ஐந்தில் தொடக்கற்றோர்
சித்தம் பரத்தில் திரு நடத்தோரே.

விளக்கம்:
 அலைபாயும் மனத்தை அடக்கிச் சிவன்பால் செல்லவிட்டு, முக்தியாகிய வீடு பேற்றை உணர்ந்தறிந்து, மோனத் தவமிருப்பவர்கள் சிவமுத்தர் ஆவார்கள். மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்புலன் இச்சையை விட்டொழித்தவர்கள் இவர்கள். ஆகையால் இவர்கள் தூய்மையானவர், புனிதமானவர் எனலாம். இப்படிப் பட்டவர்கள் மனம் பரவெளியில் பரம்பொருளோடு கலந்து ஆனந்த நடனமிட மகிழ்ந்திருப்பர்.

Wednesday, 16 May 2012

மூவரும் ஒருவரே

மூவரும் ஒருவரே
ஆதிப் பிரானும் அணிமணி வண்ணனும்
ஆதிக் கமலத்து அலர்மிசை யானும்
சோதிக்கில் மூன்றும் தொடர்ச்சியில் ஒன்றுஎனார்
பேதித்து உலகம் பிணங்குகின் றார்களே.

விளக்கம்:
 உலகத் தோற்றத்திற்கு மூல முதல் காரணமான உருத்திரனும், அழகிய ஆடை ஆபரணங்கள் அணிந்திருக்கும், நீலமணி வண்ணமுடைத் திருமாலும், உயிர்களைப் படைப்பவனாகிய தாமரை மலர் மேல் இருக்கின்றவனான பிரமனும், ஆகிய மூவரையும் எண்ணிப் பார்த்தால் இம்மூவரும் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று செயல்களால் வேறானாலும், மூவரும் ஒரு மூலப் பரம்பொருளான சிவமே என்பதை உணராமல், இவர்கள் மூவரும் வேறு வேறு என்று வித்தியாசப்படுத்தி, உலகத்தவர் மோதி முரணுகிரார்களே!